நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் (NHAI) உள்ள 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 


இந்த சூழலில் மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று இரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.    கிடைத்த தகவலின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு முறை கட்டணம் உயர்த்தப்படும். அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்,. 


அந்த வகையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர இருக்கிறது. 


எவ்வளவு உயர்கிறது..? 


சுங்கச்சாவடிகளில் ஒருமுறை மட்டும் சென்று வரும் வாகனங்களுக்கு குறைந்தது ரு, 2 முதல் ரூ.45 வரையிலும், இருமுறை (அதாவது ரிட்டன்) எடுக்கும் வாகனங்களுக்கு ரூ. 10 முதல் 65 வரையிலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு அடிப்படையில், குறைந்தது ரூ. 5 முதல் அதிகபட்சமாக ரூ. 150 வரை உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. 


வெளியான அதிர்ச்சி தகவல்: 


முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை தாம்பரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்களில் பாதியளவு வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவை பெரும்பாலும் 'விஐபி வாகனங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுக்குள் சுங்கச்சாவடி வழியாக சென்ற 1.17 கோடி வாகனங்களில் (53.27%) 62.37 லட்சம் விஐபி வாகனங்கள் என்றும், அந்த வாகனங்களுக்கு விதிகளின்படி கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் NHAI ஆல் நியமிக்கப்பட்ட சுங்கச்சாவடி இயக்க நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், அதே சாலையில் அமைந்துள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியை பயன்படுத்திய 36% வாகனங்கள் விஐபி வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் சுங்கச்சாவடியில் 88.92 லட்சம் வாகனங்களில் 32.39 லட்சம் வாகனங்கள் பயனர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 






முன்னதாக இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எச்ஸில் பதிவிட்டதாவது, “செங்கல்பட்டு - பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத வி ஐ பி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது. நவீனஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்." என தெரிவித்தார். 


பெரும்பாலும் சுங்கச்சாவடிகளில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களே தங்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகம் பயணிக்கின்றன. இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படுவர்களும் அவர்களே. இந்த கட்டண உயர்வு குறித்து முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.