திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15ஆம் தேதிக்குள் தமிழறிஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்து உள்ளதாவது:


பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும் தமிழுக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும் அரசு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2023-ம்ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தமிழறிஞர் பெருமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


திருவள்ளுவர் திருநாளில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திருவிக விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, இலக்கிய மாமணி விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. இலக்கிய மாமணி விருது தவிர்த்த பிற விருதுகள் தலா ஒருவருக்கு வழங்கப்பட உள்ளன.


என்னென்ன பரிசு?


விருது பெறுவோருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். இலக்கிய மாமணி விருது 3 பேருக்கு வழங்கப்படும். இதில், ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை பொன்னாடை அடங்கும். 


தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் தமிழ்த் தாய் விருது ஒருவருக்கு  வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.5 லட்சம், கேடயம், தகுதியுரை வழங்கப்பட உள்ளது.


அதேபோல் கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப் புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, அம்மா இலக்கிய விருது ஆகியவை தலா ஒருவருக்கு வழங்கப்படும். அவர்களுக்கு ரூ.2 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடையுடன் அளிக்கப்படும்.


மொழிபெயர்ப்பாளர் விருது 10 பேருக்கு வழங்கப்படும். தமிழ் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது, 3 பேருக்கு தலா ரூ.2 லட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையுடனும் வழங்கப்படும். தமிழ்ச் செம்மல் விருது 38 மாவட்டங்களிலும் தலா ஒருவருக்கு ரூ.25 ஆயிரம், தகுதியுரையுடன் வழங்கப்படும்.


விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


விருதுக்கு, http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப அக்டோபர் 15 கடைசித் தேதி ஆகும். உரிய நாளுக்குள் அனுப்பும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும். 


கூடுதல் விவரம் அறிய விரும்புவோர் 044- 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.