அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் புதிய திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் மார்ச் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


தமிழக அரசு திட்டம்:


தமிழ்நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய அரசு திட்டமிட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.38 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மாநிலம் முழுவதும் 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து,க்டந்தாண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து, மே 21-ந்தேதி நீலகிரியில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


புதிய சத்துமாவு திட்டம்:


அதன் தொடர்ச்சியாகவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் கூடுதல் சுவை, புரதச்சத்து விகிதத்தை அதிகரித்து வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 நிறங்களில் மாவு பாக்கெட்டுகள் வகை பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


யாருக்கு என்ன பாக்கெட்?


6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதில், வெள்ளை நிற பாக்கெட்டும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டும்,  கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீல நிற பாக்கெட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் மார்ச் 1-ந்தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


குழந்தைகளை கவர திட்டம்:


இதுதொடர்பாக பேசியுள்ள துறைசார் அதிகாரிகள், ”2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 'வெனிலா', 'சாக்லேட்', 'ஸ்டாபெர்ரி' போன்ற சுவை உடைய சத்துமாவு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ஆர்வமுடன் சத்துமாவு சாப்பிடுவார்கள். இதேபோல, கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரே வகையிலான மாவு பாக்கெட்டுகள் வழங்கப்படும். இவர்களுக்கான சத்துமாவில் இனிப்பு சதவீதத்தை குறைத்து புரத சத்துக்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சத்துமாவுக்கும், புதிதாக வழங்கப்பட உள்ள சத்துமாவுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் சத்துமாவு வழங்கப்படவேண்டும் என்பதால் கூடுதலாக சிலவற்றை இணைத்துள்ளோம். முன்பு அனைவருக்கும் 2 கிலோ அளவுடைய பாக்கெட் மாவுகள் வழங்கப்பட்டது. இப்போது, 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 2 கிலோ பாக்கெட்டு வழங்கப்படும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், பாலூட்டும் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு 500 கிராம் பாக்கெட்டுகள் வழங்கப்படும். அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இந்த திட்டத்தை மார்ச் 1-ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்” என தெரிவித்தனர்.


சத்துமாவு திட்டம் என்றால் என்ன?


தமிழகத்தில் உள்ள கருவுற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க தமிழக அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2 கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதேபோல, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்ற 'பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்புத் திட்டம்' மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.