ஆதார் கார்டுடன் மின்சார இணைப்பு எண்ணை இணைப்பதை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்:


மின்மானியத்தைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ளது. நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு, ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காவதர்களிடம் மின் கட்டணத்தை வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிகாரிகள் மறுப்பதாக கூறப்படுகிறது.


ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.



  • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான adhar.tnebltd.org/Aadhaar/ க்கு செல்லுங்கள்.

  • உங்கள் சேவை இணைப்பு எண், செல்போன் எண், பாதுகாப்பு கேப்ட்சா மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு, பின்னர் Enter என்பதைக் கிளிக் செய்யவும்.

  • உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அதில் பதிவிட வேண்டும்.

  • இப்போது உங்கள் TANGEDCO கணக்கில் இணைக்க விரும்பும் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.

  • ஆதார் அட்டையில் என்ன பெயர் இருக்கிறதோ அதை அப்படியே உள்ளிடவும்.

  • உங்கள் ஆதார் அட்டையை பதிவேற்றவும்.

  • படிவத்தை அனுப்பவும். பின்னர், ஒப்புகை ரசீதையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தற்போதைக்கு, உள்ளூர், விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசைவாழ் குடியிருப்பாளர்களால் மட்டுமே மின் இணைப்பு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான வசதி உள்ளது.


3 கோடி மின் இணைப்புகள்:


தமிழ்நாட்டில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.


மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.


இதற்கு மத்தியில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.