இலவசப் பெண் கல்வியை அளிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும் பிரகதி ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கு மாணவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


உயர் கல்வி நிறுவனமான ஏஐசிடிஇ சார்பில் பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பிரகதி என்ற திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2022- 23ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. 


இந்த கல்வி உதவித்தொகைக்கு பொறியியல் முதல் ஆண்டு மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகையைப் பெற 10, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். திருமணத்துக்குப் பிறகு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


பிரகதி உதவித்தொகைக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமல்லாமல், ஏற்கெனவே இந்தத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


உதவித் தொகையை வழங்குவதில் எஸ்சி மாணவிகளுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடும், எஸ்டி மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், ஓபிசி மாணவிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.




விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்


* பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
* மாணவியின் ஆதார் எண்
* வருமானச் சான்றிதழ்
* கல்விக் கட்டண நகல்
* சாதிச் சான்றிதழ்
* கல்லூரி தலைவரிடம் இருந்து சான்றிதழ்


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 டிசம்பர் 2022


உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்த மேலும்கூடுதல் விவரங்களை https://www.aicte-pragati-saksham-gov.in/resources/combine%20pragati%20&%20saksham%20(1).pdfஎன்ற தளத்தில் அறியலாம்.


பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.


முன்னதாக, பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக "பரிக்‌ஷா பே சார்ச்சா" என்ற நிகழ்ச்சிக்குப் பதிவு செய்யவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.