தமிழகத்தின் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதையொட்டி ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பகலில் கொளுத்தும் வெயிலிலும், மாலையில் மழை, இரவில் பனி என மாறிமாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.


இந்த நிலையில்,  நவம்பர் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் என்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு


ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை


குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 - 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.