நடுவர் மன்றத்தின் மூலம் கர்நாடகத்தின் புதிய அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்டியது பற்றி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நடுவர் மன்றத்தின் மூலம் கர்நாடகத்தின் புதிய அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும். கர்நாடகாவின் அணையால் கிருஷ்ணகிரியில் 870 ஹெக்டேர் பாசனம் பாதிக்கப்படும். கர்நாடக அணை கட்டும் பிரச்னைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள், மக்களின் நலனை பாதுகாக்க தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


விரிவான அறிக்கை


02-07-2021 அன்று சில நாளோடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.


MK Stalin Health Updates: ராமச்சந்திராவில் முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை!


2017இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அந்தப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டிஎம்சி கொள்ளளவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019-இல் இந்த அணை அநேகமாக கட்டிமுடிந்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இந்த செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 18-5-2018 இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14-11-2019 அன்று அளித்த தீர்ப்பில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.




29-06-2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


TN Curfew Extension: எல்லாம் ‛ரிலீஸ்...’ ஒரே தளர்வு... ஒரே கட்டுப்பாடு; தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு நீட்டிப்பு!