தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.


இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளரை பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன் கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கான நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. 




முன்னதாக நேற்று அதிமுக-பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறினார். எனினும் இரு கட்சிகள் இடையே இடங்கள் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் வெளியாகவில்லை. 


தமிழ்நாட்டில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் - அண்ணாமலை