வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 6-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.


இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மட்டும் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவித்துள்ளார். மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.  கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 


மேலும், செங்கல்பட்டு,காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று (3.11.2022) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.