TN Rain Alert: தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஆரஞ்சு அலெர்ட்:


வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தமிழ்நாட்டில் இன்று தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.  மேலும், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, , திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.


வானிலை மையம் எச்சரிக்கை:


தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

 

நேற்று (20-10-2024) வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  காலை (21-10-2024) 0530 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ஆம் தேதி காலை, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23-ஆம் தேதி வாக்கில்  புயலாக  வலுபெறக்கூடும். அதன் பிறகு,  இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை,  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,  ஒரிசா – மேற்கு வங்காள  கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.   

3 நாட்களுக்கான வானிலை நிலவரம்


21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,  அரியலூர், பெரம்பலூர், கடலூர்,  கரூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

 

22.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 

23.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை & புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   


வங்கக்கடல் பகுதிகள்:


21.10.2024: அந்தமான் கடல் பகுதிகள்,  மத்தியமேற்கு, மத்தியகிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய      தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

 

22.10.2024: மத்தியகிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும்,  வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்:


21.10.2024: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.