TN Rain Alert: சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்களில் சீரான மழை சிறிது நேரம் தொடரும் என, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு வெதர்மேன் போட்ட டிவீட்:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு சில நல்ல செய்தி.  சீரான மழை சிறிது நேரம் தொடரும். காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை தாண்டி கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றின் ஒருங்கிணைப்பு பகுதி கடக்கும்போது மாநிலத்தின் வடக்கே இருக்கும். அதனால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். முக்கிய காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று கனமழை பொழிய நமக்கு வாய்ப்பில்லை. சாதாரண மழை பெய்யலாம். நாம் பார்க்கிறபடி, காற்றின் ஒருங்கிணைப்பு பகுதி தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது. காற்றழுத்த தாழ்வு நில தரையை நோக்கி நகர்வதை பொறுத்து, 18-20ம் தேதிகளில் சென்னையில் மழை பெய்யக்கூடும். அது சாதாரண சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும், எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.






சென்னை மக்கள் மகிழ்ச்சி:


காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த திங்களன்று இரவு தொடங்கி நேற்று மாலை வரை தொடர்ந்து பரவலாக சென்னையில் மழை பெய்து வந்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழைநீரும் புகுந்தது. அதேநேரம்,  நேற்றைவிட இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், மீண்டும் உடைமைகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைய வேண்டுமோ என, பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால், சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


முன்னதாக, ரெட் அலெர்ட் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கும் கூட விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.