சென்னையில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காலை (20-10-2023) 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,  தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 






இப்படியான நிலையில் சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. விடுமுறை தினம் என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை வானிலை மையம் அடுத்த 2 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) 5 மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


21.10.2023: மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
22.10.2023: மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.