தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபகாலமாக பாஜகவில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றது. சமீபத்தில் பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா, அக்கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக திட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் கடும் அழுத்தத்திற்கு உள்ளான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார். மேலும் சூர்யா - டெய்சி இருவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்றைய தினம் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில்  தமிழகத்தில் தி.மு.க.வுக்கு தாங்கள் தான் எதிர்கட்சி என்று சொல்லும் பாஜக,   ஸ்டாலின் உறுமும்போது மட்டும் பயந்து பதுங்கும் பூனைகளால் நிறைந்திருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். 


இதனை குறிப்பிட்டு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, அண்ணாமலையை குறிப்பிட்டு  "உங்கள் கனவு, ஆசை எல்லாம் சினிமாவை சுத்தியே இருக்குதாமே. நான் சொல்ல சுப்பிரமணிய சுவாமி சொல்லுது!! நடிகை வாசுகிகிட்ட 1000 ரூபா கொடுத்து திமுகவை திட்ட சொன்னப்பவே தெரியும் எல்லாம் பில்டப்பு தானு.பாஜகவே ஒரு நாடக கம்பெனிதானு என தெரிவித்திருந்தார். 






இந்த பதிவுக்கு திருச்சி சூர்யா பதிலளித்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், அப்படியே வச்சுக்கோ , ஆனா உங்க மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது பா . புரியவில்லை என்றால் போய் உங்க சின்னவர் கிட்ட கேளு என சரமாரியாக தாக்கி பேசியிருந்தார். இதனால் சூர்யாவை காயத்ரி ரகுராம் விமர்சிக்க பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. மீண்டும் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்குவதால் அண்ணாமலை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.  இந்நிலையில் திருச்சி சூர்யா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.