காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


விரைவில் சிகிச்சை:


இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  செந்தில் பாலாஜியின் மனைவியின் விருப்பத்தின் பேரிலேயே அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டெல்லியில் இருந்து வரும் எய்ம்ஸ் மருத்துவர்களே  செந்தில் பாலாஜியை பரிசோதிக்க அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்” என குறிப்பிட்டார். 


மருத்துவ குழு வருகை:


இதனிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நிலை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ குழு இன்று சென்னை வருகிறது. அவர்கள் அமைச்சரின் உடல்நிலையை ஆய்வு செய்து, அமலாக்கத்துறைக்கு அறிக்கை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்தடுத்து வழக்குகள்:


அமலாக்கத்துறையால் கடந்த செவ்வாயன்று இரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வரும்போது, அமைச்சரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதேநேரம் அமைச்சர் சார்பில் ஜாமின் கோரியும், அவரை விசாரணைக் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.


காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்:


ஆட்கொண்ர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உயர்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. அமலாக்கத்துறையின் மருத்துவக் குழுவும் காவேரி மருத்துவமனைக்கு சென்று அமைச்சரின் உடல்நிலையை ஆராயலாம் எனத் தெரிவித்தது. அரசு மருத்துவமனையில் கொடுத்த அறிக்கையை நம்ப முடியாது என்பதையும், காவலில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுன் 22ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், வரும் 28ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிப்பார், அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். இதையடுத்து, ஜாமின் மற்றும் கஸ்டடி கோரிய மனுக்கள் மீதான விசாரணையை நடத்திய, மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதன் மீதான தீர்ப்பை இன்று வழங்க உள்ளது.