பெண்களுக்கான இட ஒதுகீட்டை எதிர்க்கும் ஆண்களுக்கு...


#JusticeForMenInTNPSCReservation ட்ரெண்டில் உள்ளது. அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30லிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்களுக்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் சில ஆண்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் என்னவென்பதை புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது. 


இந்தியாவில் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்காக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்கு தயாராக 4 பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் பல வருடங்களுக்கு ஓடுவதற்கான பயிற்சி எடுத்துக்கொண்டவர். மீதி மூவரில் ஒருவர் பல நாட்களாக சாப்பிடவே இல்லை. ஒன்னொருவரின் கால் பல ஆண்டுகளாக கட்டி வைக்கப்பட்டு திடீரென்று ஓடுவதற்காக பணிக்கப்பட்டவர். இன்னொருவருக்கு ஒரு நல்ல ஷூ கூட இல்லை, எந்த முறையான பயிற்சியும் இல்லாமல் களத்தில் நிற்கிறார். இப்படி பல்வேறு வகைப்பட்டிருக்கும் அனைவரையும் ஒரே மைதானத்தில் ஓட வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள்? எந்த வித சந்தேகமும் இல்லாமல் யார் பயிற்சியோடு, உடல் பலத்தோடு களத்தில் இருக்கிறாரோ அவர்தான் எந்தவித சிரமும் இல்லாமல் வெற்றி பெறுவார்கள். மீதி இருப்பவர்கள் அனைவருமே எங்கோ, எப்படியோ முட்டி மோதிதான் போட்டியையே நிறைவு செய்ய முடியும். அல்லது அதுவும் கூட சந்தேகம்தான். 


இப்படித்தான் இந்திய சமூகத்தில் ஒரு சமூகம் மட்டும் காலங்காலமாக படித்து, வேலை வாய்ப்பு பெற்ற சமூகமாக உள்ளது. மற்ற சமூகங்களுக்கு படிக்கவே உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. இந்த 2 சமூகங்களுக்கும் திடீரென ஒரு போட்டியை வைத்தால்? எந்த சமூகத்திற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்ததோ அந்த சமூகம்தான் வெல்லும் இல்லையா? இந்நிலையில்தான் இப்படியான ஒரு கள சூழலை புரிந்துக் கொண்டு, ஒரு அரசு அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி அனைவரையும் சமதளத்திலிருந்து ஓடச்செய்தால் அதுதான் சமூக நீதி. அந்த சிந்தனையிலிருந்து பிறந்ததுதான் இடஒதுக்கீடு. அப்படித்தான் நெடுங்காலமாக கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரங்களில் பின்தங்கிய பட்டியலின பிரிவுகளான எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


பெண்களுக்கு ஏன் தனியாக ஒரு ஒதுக்கீடு?:


அதுதான் இட ஒதுக்கீடு உள்ளதே அதில் ஏன் பெண்களுக்கு தனியாக ஒரு ஒதுக்கீடு என கேள்வி எழலாம். இந்திய சமூகம் எப்படி ஒரு சாதிய சமூகமோ அதே அளவுக்கு ஒரு ஆணாதிக்க சமூகமும்கூட. அந்த ஆணாதிக்க சமுதாயத்தில்  ஓட்டப் பந்தயத்தில் பங்குபெறும் பின் தங்கிய ஆண்களை விட பின் தங்கியிருக்கிறார்கள் பெண்கள். அவர்கள், சாதி மற்றும் பாலினம் ஆகிய காரணிகளால் இருமுறை ஒடுக்கப்படுதலுக்கு (oppressed twice) உள்ளாகிறார்கள். அப்படித்தான் பெண்களையும் ஓட்ட பந்தயத்தில் அதிகமாக பங்கு பெற செய்வதற்காக பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது.  1989இல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டது. 


இதையடுத்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அளித்துள்ள 2017-18ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 8.8 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். அதில் 2.92 லட்சம் பேர்தான் பெண்கள். அதாவது மொத்த பணி இடங்களில் இப்போது 33% மட்டுமே பெண்கள். 
இதையடுத்து 40 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பின்போது, மாற்றத்தை ஏற்படுத்துவதில் பாலின சமத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது, அந்த அடிப்படையில், பெண்களுக்கு அரசுப் பணிகளில் ஒதுக்கீட்டை அதிகரிக்க தமிழக அரசு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,


 இது தொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசியபோது, பெண்களால் ஆண்களை போல போட்டி போட முடியவில்லை. படிப்பாளியாக இருந்தால்கூட ஒரு வயதுக்கு பிறகு குடும்ப வேலைகளோடு தங்களை இணைத்து கொள்கிறார்கள். இப்படி சமுதாயத்தில் ஆண்களுக்குதான் முன்னுரிமை எனும் சூழலில் பெண்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு 30% இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் பெண்களை அதிகம் காணமுடிகிறது. இந்த இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் எல்லாத்துறைகளிலும் உயர் பதவி வரை பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். நீதித்துறையைப் பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 12 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறெந்த உயர்நீதிமன்றங்களிலும் இப்படி கிடையாது. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருக்கிற 30 சதவீத இடஒதுக்கீடு. இப்படி டிஜிபி, கல்லூரிகளில் டைரக்டர்கள், டீன், முதல்வர்கள், என பெரிய பெரிய பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள். திராவிடர் இயக்கம் தந்தை பெரியார் வழியில் , அண்ணாவின் முயற்சியை நடத்திக்கொண்டு வருவதுதான் அதற்கு காரணம்.




இந்த நடைமுறையின் அடுத்த பாய்ச்சல்தான்  30 சதவீதத்தை 40 சதவீதமாக உயர்த்துவது. இதனால் அரசுப்பணிகளில் இன்னும் அதிகமாக பெண்கள் பங்காற்ற முடியும். 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில்தான் எல்லா அரசு வேலைகளிலும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டது. ஒரு நூற்றாண்டு நிறைவடைய உள்ள சூழலில் கிட்டத்தட்ட அதை நோக்கி போய் கொண்டிருப்பதாகத்தான் 40 விழுக்காட்டைப் பார்க்கிறேன். பதவியேற்பில் நீதிக்கட்சியின் தொடர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னார். அதன் அடுத்த அறிவிப்பாக இது இருக்கிறது. தமிழ்நாட்டு பெண்கள் திராவிட இயக்கம் என்றால் என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. 


மேலும், இப்படி கிடைக்கிற அரசு வேலை என்பது மிகபெரிய வாய்ப்பு. அப்படி வேலைக்கு வரும் பெண்கள் தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு வெறும் தகுதியால் மட்டும் கிடைத்தது அல்ல. அது ஒரு சமூகத்தினுடைய சீர்திருத்தத்தால் கிடைத்தது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


ஆண்களை வாய்ப்புகளைப் பறிக்குமா பெண்களுக்கான இட ஒதுக்கீடு? 


பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீட்டால் ஆண்களுக்கு பாதிப்பு என்று சொல்பவர்கள் பெண்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் காலம் காலமாக இழைக்கப்படும் அநீதிகுறித்துப் பேசுவதல்லை. மக்கள் தொகையில் பெண்கள் சரிநிகர் சமானமாய் இருந்தும் அரசுப்பணிகளில் மிகக்குறைவாகவே பெண்கள் இடம் பெற்றனர்.  30% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அமலுக்கு வந்த பிறகே அந்த நிலையில் ஓரளவு மாற்றம் வந்தது. அப்போதும்கூட பல துறைகளில் முப்பது சதவிகித இடங்களில் பெண்கள் நிரப்பப்படவே இல்லை. அதற்காக ஒருவரும் குரல் கொடுக்கவில்லை. அரசும் எவ்வளவு பெண்கள் எந்ததெந்த அரசுத்துறைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையான புள்ளிவிபரத்தையும் தருவதில்லை. கல்வித் தகுதியும் திறனும் கொண்ட பெண்கள் இன்று எல்லா நிலைகளிலும் போட்டியிடக்கூடிய நிலை இருந்தும் அவர்கள் அரசுப்பபணிகளிலோ உயர்பதவிகளிலோ அவர்களது பாலின விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஏன் இடம் பெற முடியவில்லை? காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் ஒரு அநீதியை மாற்றுவதற்கான ஒரு முயற்சியையே அநீதி என்கிறார்கள்.


நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவர விடாமல் எந்த மனோபாவம் எதிர்க்கிறதோ அதுதான் இதற்குப்பின்னாலும் இருக்கிறது. தகுதி இருந்தும் பெண்கள் என்பதற்காகவே பெண்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அதை சமூக நீதி சார்ந்த பாலின சமத்துவம் சார்ந்த இட ஒதுகீட்டால்தான் சரி செய்ய முடியும். இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பு திட்டம் அல்ல. ஆனால் சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை இட ஒதுக்கீட்டின் மூலமாக பெற முடியும். அப்படித்தான் ஒடுக்கப்பட்ட ஒரு பாலினம் வேலையில், ஒரு அதிகாரத்தில் அமரும்போது மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க முடியும். ஒரு பெண் தனது கல்வி, வேலைவாய்ப்பியின் மூலம் அடைகிற அதிகாரம் அப்படித்தான் அவளது உரிமைகளை உறுதி செய்கிறது.  


சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல, எல்லோருக்கும் சமவாய்ப்பை வழங்குவது. எனும் லாஸ்கியின் மேற்கோளை அறிஞர் அண்ணா அடிக்கடி மேற்கோள் காட்டுவாராம். அப்படி பெண்களுக்கான சமவாய்ப்பை உருவாக்குவதுதான் இந்த 40 விழுக்காடு இட ஒதுக்கீடு. 
ஒரு சமூகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை, அந்தச் சமூகத்தின் பெண்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம் என்று கூறுவார் அண்ணல் அம்பேத்கர். வாய்ப்பு பறிபோனதாய் வருந்தும் நீதி கேட்கும் ஆண்களே தமிழ்ச்சமூகம் அடைந்திருக்கும் வளர்ச்சியை கண்களை இன்னும் கொஞ்சம் அகல விரித்து பாருங்களேன்.