TN Rain: நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தென் மாவட்டங்களில் கனமழை:


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்து வருகிறது. 


இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிப்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68 சதவீதமும், நெல்லையில் 135 சதவீதமும், குமரியில் 103 சதவீதமும், தென்காசியில் 80 சதவீதமும் கூடுதலாக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லையில் 39.12 செ.மீ, தூத்துக்குடி 37.96 செ.மீ, தென்காசியில் 20.68 செ.மீ, குமரியில் 11.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.  அதேபோல, காயல்பட்டினத்தில் 94.6 செ.மீ, திருச்செந்தூர் 68.9 செ.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 62.1 செ.மீ, கோவில்பட்டினத்தில் 52.5 செ.மீ, சாத்தான்குளத்தில் 47.1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. 


வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு:


இதனால் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இப்படியான நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மக்கள் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலிக்கு 1077, 0462 2501012 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1077, 0461 2340101 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார்.   




மேலும் படிக்க


Tirunelveli Rain: நெல்லையில் 1992ல் நடந்த துயர சம்பவம்! 31 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரும்பிய சோக வரலாறு!