தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து ஜூன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலர்களின் புறக்கணிப்பு போராட்டத்தில் அனைத்து நிலை வருவாய் நிலை அலுவலர்களும் ஈடுபட உள்ளதாகவும் சுமார் 40 ஆயிரம் பேர் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எதற்காக இந்த போராட்டம்?
பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ( ஃபெரா அமைப்பு) வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தி
2021ஆம் ஆண்டு திமுக அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், அரசு காலி இடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.
எனினும் இவை முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன. இந்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி, அவ்வப்போது இந்த சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜூன் 25-ல் போராட்டம்
இந்த நிலையில், தங்களின் பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.