கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குத்தான் அனுப்பிய அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு பதிலாக நிதித்துறை செயலாளர் கலந்துகொண்டார். இது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.






பி.டி.ஆர் சமர்ப்பித்த அறிக்கையில் பெட்ரோல் & டீசல் மீதான செஸ் வரிகளை முற்றிலுமாக கைவிட ஒன்றிய அரசு முன்வரும்பட்சத்தில், அதனை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   


அறிக்கையில், இந்திய அரசியலமைப்பு மூலமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சிறு அளவிலான உரிமைகளில் பெரும்பாலானவற்றை GSTயின் அறிமுகத்துக்கு பின்னர் நாங்கள் இழந்த நிலையில், பெட்ரோல் & டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் வரிகள், அதன் மூலம் கிடைக்கும் வருவாய், அதை நிர்வகிக்கும் உரிமை ஆகியவை மாநிலங்களிடம் எஞ்சியுள்ள சில உரிமைகள் என்பதே எங்கள் பொதுவான எண்ணம். எஞ்சியுள்ள வெகு சில உரிமைகளையும் விட்டுக்கொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை என்ற காரணத்தால் இந்த பொருட்களை GST-இன் கீழ்கொண்டு வரும் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும், பின்வரும் காரணங்கள் எங்கள் சந்தேகங்களை பல மடங்கு அதிகரிக்கின்றன


2014-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை, ஒன்றிய அரசு பெட்ரோல் & டீசல் மீது விதிக்கும் வரியின் அளவை 500% முதல் 1000% வரை உயர்த்தியுள்ளது


2014-ஆம் ஆண்டு விதிக்கபட்ட ஒன்றிய வரியில் கலால் 90% (நிதிக்குழுவின் பரிந்துரை படி மாநிலங்களுக்கு பிரித்து அளிக்க வேண்டிய பங்கு) என்றும் செஸ் 10% (மாநிலங்களுக்கு பிரித்து அளிக்க வேண்டியதில்லை) என்ற அளவிலும் இருந்தது. இந்த வரிகளின் நிலையானது தற்போது கலால் 4% என்றும் செஸ் 96% (இதில் ஒரு பைசா கூட மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படுவதில்லை) என்ற அபரிதமான அளவிலும் உள்ளன. இந்த செயல்பாடுகள் காரணமாக மாநிலங்கள் பெருமளவிலான வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. அதே வேளையில் பெட்ரோல் & டீசல் மீது விதிக்கப்படும் வரிகள் காரணமாக ஒன்றிய அரசின் வருவாய் ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.


இதுபோன்ற நிலையில் பெட்ரோல் & டீசல் மீதான வரி உரிமைகளை மாநிலங்கள் வசமிடம் இருந்து முழுமையாக பறித்து அவற்றை GST-இன் கீழ் கொண்டு வரும் திட்டம் மிகவும் அபாயகரமான, அழிவை ஏற்படுத்தும் அநீதியாக இருக்கும். இருந்த போதும், பெட்ரோல் & டீசல் மீதான செஸ் வரிகளை முற்றிலுமாக கைவிட ஒன்றிய அரசு முன்வரும் பட்சத்தில், எங்கள் நிலை குறித்து மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளோம். மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான ஒட்டுமொத்த பரிமாற்றங்களை கருத்தில் கொண்டு, மாநிலங்களின் நிதி உரிமைகளை மீட்கும் வழிமுறையை கண்டறியாமல், தனியொரு விஷயமாக இதை கருத்தில் கொள்ள முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.  


முன்னதாக,  ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது குறித்து முன்னாள் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், "தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பொதுமக்கள் - வணிகர்கள் - ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். நான் ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்தது இல்லை.. நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், " நான் அனுப்பிய 14 பக்க அறிக்கையை ஜிஎஸ்டி மாமன்றமும், ஒன்றிய நிதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர்வதற்காக நான் அந்த அறிக்கையை  பகிரவில்லை. இந்த விதிகளை புரிந்து கொள்ளாத சில கயவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை . மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார். 


இந்நிலையில், இன்றும் ஜெயக்குமார் மீது பல்வேறு விமர்சனங்களை பிடிஆர் முன்வைத்து வருகிறார். இன்று காலை அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " அடுத்த வேடிக்கைக்கு முன்னோட்டமாக, ஜெயகுமாருக்கு 2 கேள்விகள். GST வேண்டாம் என்கிற "அம்மா"வின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்? GSTசட்டம் பாராளுமன்றத்தில்   நிறைவேற்றுவதற்கு(April2017) முந்தைய மிக முக்கியமான 16/03/2017 GSTகவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.   


மற்றொரு ட்விட்டர் பதிவில், 500+பக்க நிகழ்ச்சி அஜெண்டாவைப் படித்து நான் GSTCக்கு எழுதிய அறிக்கை https://cutt.ly/UEleusf "அண்ணன்" ஜெயகுமாருக்கு 2 கேள்விகள்?? 1) நீங்கள் எத்தனை கூட்டங்களின் நிரல்களைப் படித்தீர்கள் 2) 30 கூட்டங்களில் தமிழ்நாடு சமர்ப்பித்ததில் 1 வார்த்தையாவது எழுதினீர்களா அல்லது CT துறை கொடுத்த உரையைப் படித்தீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.