தமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ.5 கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ இயந்திரத்தை ரூ.7 கோடிக்கு வாங்க டெண்டர் கோரப்பட்டதாக பரவும் தவறான தகவலுக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. 

Continues below advertisement

தவெக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் விரயமாக செலவிடப்படும் தொகையை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது. 

அதாவது விஜய் தலைமையிலான தமிழக அரசு எம்.ஆர்.ஐ இயந்திரங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்க டெண்டர் விட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சொல்லப்பட்டது. குறிப்பாக குறைந்த விலையில் உள்நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள்  கிடைக்கிறது. அதை விடுத்து  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்  அதிக விலையில் இயந்திரங்கள் வாங்கும் முடிவை எடுத்துள்ளது. இதில் சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை அரசுக்கு பண இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஊழல் நடைபெறவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

Continues below advertisement

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசின் அனைத்து விதமான டெண்டரிலும் மேக் இன் இந்தியா உற்பத்தியாளர்கள் பங்கேற்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் எம்.ஆர்.ஐ இயந்திரம் டெண்டரில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனால் பலரும் சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்த முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இதையும் படிங்க: MRI இயந்திரம் கொள்முதலில் வருவாய் இழப்பும் புறக்கணிப்பும்... முதல்வர் விஜய்க்கு பறந்த கோரிக்கை!

உண்மை என்ன?

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூன்று ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ஐ கருவிகளை கொள்முதல் செய்ய ரேட் காண்ட்ராக்ட் ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றது. இதில் பிலிப்ஸ், சிமேன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் செக்குயுயா என்ற இந்திய நிறுவனமும் பங்கேற்றது.

ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின் படி சி.டி.எஸ்.கோ சான்றுடன் யு.எஸ்.எப்.டி.எ /சி.இ என்ற சான்றுகளும் உள்ள கருவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும். யு.எஸ்.எப்.டி.எ சி.இ சான்று தேவை என்ற நிபந்தனை, 2001ஆம் ஆண்டிலிருந்து வாங்கப்பட்ட எல்லா எம்.ஆர்.ஐ கருவிகளுக்கு தரம் மற்றும் மருத்துவப் பயனாளிகளின் பாதுகாப்பு அடிப்படையில் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. செக்குயுயா நிறுவனம் முன்மொழிந்த கருவிகளுக்கு யு.எஸ்.எப்.டி.எ / சி.இ சான்று மற்றும் சில தொழில் நுட்ப குறிப்புகள் இல்லை என்பதால் அவை வல்லுனர் குழுவால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து செக்குயுயா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறான தகவலை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.