தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதில் பள்ளிக் கல்வித்துறைக்கு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.


1. இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, அரசு பள்ளிகளின்‌ கட்டமைப்பை மேம்படுத்தவும்‌, புதிய கட்டடங்கள்‌ கட்டிடவும்‌ 7,000 கோடி ரூபாய்‌ செலவில்‌,'பேராசிரியர்‌ அன்படிகன்‌ பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. 


2. அதேபோல நடப்பாண்டில்‌, 2,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும்‌ நிதியாண்டில்‌, புதிய வகுப்பறைகள்‌, ஆய்வகங்கள்‌, கழிப்பறைகள்‌ என மொத்தம்‌ 1500 கோடி ரூபாய்‌ செலவில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.


எண்ணும்‌ எழுத்தும்‌ திட்ட விரிவாக்கம்


3. எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டமானது 2025 ஆம்‌ ஆண்டுக்குள்‌ ஒன்று முதல்‌ மூன்றாம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ அடிப்படை கல்வியறிவும்‌ எண்கணிதத்‌ திறனும்‌ அடைவதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின்‌ அடிப்படையில்‌, வரும்‌ நிதியாண்டில்‌ 110 கோடி ரூபாய்‌ செலவில்‌ நான்காம்‌ ஐந்தாம்‌ வகுப்புகளுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்படும்‌.


4. தலைநகர்‌ சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ புத்தகத்‌ திருவிழாக்களும்‌ ஐந்து இலக்கியத்‌ திருவிழாக்களும்‌ வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும்‌ ஆண்டில்‌ 10 கோடி ரூபாய்‌ நிதியுடன்‌ தொடர உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌. 


5. முதல்‌ சென்னை சர்வதேச புத்தகக்‌ கண்காட்சியினை 24 நாடுகளின்‌ பங்கேற்புடன்‌ 2023 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதத்தில்‌ அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும்‌ பல்வேறு நாடுகளைச்‌ சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம்‌ மற்றும்‌ பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்‌ 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக்‌ கண்காட்சி ரும்‌ ஆண்டிலும்‌ நடத்தப்படும்‌.


6. முதலமைச்சரின்‌ தலைமையில்‌ 19-08-2021 மற்றும்‌ 12-04-2022 ஆகிய நாட்களில்‌ நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும்‌ கண்காணிப்புக்‌ குழுக்‌ கூட்டங்களில்‌ ஆதிதிராவிடர்‌ நலப்‌ பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம்‌ நடத்தவும்‌, பராமரிக்கவும்‌, கோரிக்கைகள்‌ முன்வைக்கப்பட்டன. 




7.கல்விப்‌ பெருவழியில்‌ நமது இலட்சியமான சமூகநீதியை அடைந்திட, பல்வேறு துறைகளின்‌ கீழ்‌ செயல்படும்‌ பள்ளிகளின்‌ கல்வித்‌ தரத்தை உயர்த்தவும்‌, அனைத்து மாணவர்களுக்கும்‌ தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும்‌ வேண்டும்‌. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும் சீர்மரபினர்‌ நலத்துறை, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின்‌கீழ் செயல்படும்‌ அனைத்து பள்ளிகளும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ கொண்டு வரப்படும்‌. 


8.இப்பள்ளிகளில்‌ தற்போது பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ அனைத்து பணிப்‌ பயன்களும்‌ பாதுகாக்கப்படும்‌.


கல்வி உதவித்தொகைக்கு இணையதளம்


9.பல்வேறு அரசுத்‌ துறைகள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ கல்வி உதவித்தொகையில்‌ உள்ள தேவையற்ற தாமதங்களைக்‌ குறைக்கவும்‌, தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில்‌ நேரடிப்‌ பணப்பரிமாற்ற முறையில்‌, அவர்களது வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்தப்படுவதை உறுதி செய்யும்‌ வகையில்‌ ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம்‌ ஒன்று உருவாக்கப்படும்‌.


10.சங்கத்தமிழ்‌ வளர்த்த மதுரையில்‌ இரண்டு இலட்சம்‌ சதுர அடி பரப்பளவில்‌ எட்டு தளங்களுடன்‌ நவீன வசதிகளைக்‌ கொண்ட மாபெரும்‌ நூலகம்‌ ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள்‌, மாணவர்கள்‌, ஆராய்ச்சியாளர்கள்‌, போட்டித்‌ தேர்வு எழுதும்‌ இளைஞர்கள்‌. இல்லத்தரசிகள்‌, மூத்த குடிமக்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ என அனைத்துத்‌ தரப்பினரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌, இந்த நூலகம்‌ அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளைக்‌ கவரும்‌ வண்ணமயமான நூலகச்‌ சூழல்‌, போட்டித்‌ தேர்வு மாணவர்களுக்கான இணையவசதியுடன்‌ கூடிய சிறப்புப்‌ பிரிவு, பார்வைத்‌ திறன்‌ குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள்‌, குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள்‌, தென்தமிழகத்தின்‌ பண்பாட்டைப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌ கலை அரங்கம்‌ மற்றும்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞரின்‌ படைப்புகள்‌, பேச்சுகள்‌ இடம்‌ பெறும்‌ வகையில்‌ எழிலார்ந்த கூடம்‌ உள்ளிட்ட சிறப்பம்சங்கள்‌ இம்மாபெரும்‌ நூலகத்தில்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌.


முதற்கட்டமாக, இந்த நூலகத்தில்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழிகளில்‌ இலக்கியம்‌, பண்பாடு, அறிவியல்‌, பொறியியல்‌, சட்டம்‌, மருத்துவம்‌ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்‌ 3 இலட்சத்து 50 ஆயிரம்‌ நூல்கள்‌ இடம்பெறும்‌. தென்தமிழ்நாட்‌டின்‌ அறிவாலயமாகத்‌ திகழப்போகும்‌ இந்நூலகம்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞரின் நூற்றாண்டுத்‌ தொடக்க நிகழ்வாக, தமிழ்ச்‌ சமுதாயத்திற்கு அவர்‌ ஆற்றிய பணிகளைப்‌ போற்றும்‌ வகையில்‌, “கலைஞர்‌ நூற்றாண்டு நூலகம்‌” என்ற பெயரைத்‌ தாங்கி, வரும்‌ ஜூன் மாதம் திறக்கப்படும்''. 


இவ்வாறு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.