கடலூர் மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய திமுக கவுன்சிலருக்கு எதிராக அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கவுன்சிலருக்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


கவுன்சிலருக்கு எதிராக திமுக நடவடிக்கை:


இது தொடர்பாக  துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை அவரை கைது செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பக்கிரிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.


முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி:


அதற்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளி தாளாளர் பக்கிரிசாமி உடனடியாக கைது செய்யப்பட்டார். 


குற்றத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். எனக்கு தெரியவில்லை; டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என நான் கூற மாட்டேன். 


புகாருக்கு உள்ளானவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோரை மனித குலத்திற்கு ஒரு அவமான சின்னமாக கருதுகிறோம்" என்றார்.


பெண்களுக்கு எதிராக குறிப்பாக சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக இந்த சம்பவங்கள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது. 


இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற செயல்கள் குறைந்தபாடில்லை.


சமீபத்தில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, மூக்கையூர் கடற்கரையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 442 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 1,077 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதன் உச்சமாக நெல்லை பழவூரில் பெண் போலீஸ் எஸ்.ஐ மார்கரெட் தெரசா கழுத்தறுக்கப்பட்டார். இன்னொருபுறம் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனையும் கிடைப்பதில்லை. இப்படி தாமதமாகக் கிடைக்கும் நீதியும் குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.