சேலம் மாவட்டத்தில் இன்று அதாவது ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, நடைபெற்ற பட்டாசு குடோன் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் 50 சதவீத காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் தொலை தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொத்தமான பட்டாகக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்த்த திருநீடேசன், த/பெ.சென்றாயன் (வயது 50), திரு. சதீஷ்குமார், த/பெ.கந்தசாமி (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம், எம்.கொல்லப்பட்டியைச் திருமதி.வசந்தா. க/பெ.பழனிசாமி. (வயது 45), திருமதி.மோகனா. க/பெ.வடிவேல் (வயது 38), திருமதி.மணிமேகலா, க/பெ.ராஜா (வயது 36), திருமதி.மகேஸ்வரி, க/பெ.வெங்கடேசன் (வயது 32), திரு.பிரபாகரன், சேர்ந்த த/பெ.அண்ணாதுரை. (வயது 31) மற்றும் திருமதி.பிருந்தா, க/பெ.மோகன் (லேட்) (வயது 28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.


உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் எனது தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


பட்டாசு குடோன் விபத்து


சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்டி செங்கனூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சதிஸ்குமார். இவர் சர்க்கில் வானம் பட்டாசு குடோன் உரிமையாளர். பட்டாசுகளை மொத்தமாக விற்பனை செய்யும் இந்த குடோனில் பத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நான்கு மணி அளவில் பட்டாசு குடோனில் திடீர் வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பட்டாசு குடோன் உரிமையாளர் சதீஷ் குமார், நடேசன் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


மேலும் பட்டாசு வெடி விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மோகனா, எம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த வசந்தரா, மகேஸ்வரி, மணிமேகலை, பிரபாகரன், பிருந்தா ஆகிய 6 பேர் ஆகியோர் 50 சதவீத தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 



பட்டாசு வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, தெற்கு துணை ஆணையாளர் லாவண்யா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரும்பாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரனையில் பட்டாசு குடோனில் இருந்த 3 பேர் உயிரிழந்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளது.


காவல்துறை விசாரணை


இந்த விபத்து எவ்வாறு நடந்தது எத்தனை பேர் பணி புரிந்தனர் என்பது குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அரசு மருத்துவமனை படுகாயம் அடைந்து பாதிக்கபட்ட நபர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்து, 6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.