தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


அண்ணாமலை ட்விட்டர் பதிவு:


இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக்கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மது வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன.


இந்த போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் இந்தத் துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுக் கடையின் முன்பு பாஜக தொண்டர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழக சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


தஞ்சையில் இருவர் பலி?


தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாகவும், பாரில் மது வாங்கி குடித்த விவேக் என்ற 36 வயது நபர் மற்றும் குப்புசாமி என்ற முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய சென்ற வட்டாட்சியர் சிறைபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தஞ்சை சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி, பதவி விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


சமீபத்தில் விஷச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பதற்றமே இன்னும் முழுமையாக தனியாத நிலையில், அரசு மதுபானக் கடைகளில் கள்ளச் சந்தையில் மதுவை வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.