அந்தக் கடிதத்தில், ’’மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்,


கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், GST கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.


கொரோனா நோய் தொற்றால் இணைய வழியில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டம், சுமார் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது மக்களை மதிக்காத ச்சதிகாரம் என்பது பாஜகவின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே.




தங்கள் நிதி அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, ”தான் கலந்து கொள்ள இயலாத காரணத்தைச் சொன்ன போது தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது.வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர். இதிலிருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.


செப்டம்பர் 2ஆம் தேதியே லக்னோவில் நடைபெறும் GST கவுன்சில்கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்டது, ஆனால் போதிய அவகாசம் இல்லை என்கிறார் நிதி அமைச்சர் திரு.PTR.தியாகராஜன், லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறார், பின்னர் தந்த விளக்கத்தில் சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறார். பயணிக்க ஒன்றரை நாட்களாகும் மூன்று விமானங்கள் மாற வேண்டும் என்று தன் கூற்றுக்கு தன்னிலை விளக்கம் வேறு தருகிறார். வெறும் மூன்று மணி நேரப் பயணத்தில் நேரடி விமானம் இருந்தும், தவறான தகவல்களை, அவர் சட்டமன்றத்தில் சொல்வது போலச் சொல்கிறார்


சரக்கு மற்றும் சேவை வரி GST எத்துணை முக்கியமானது என்பதை தாங்கள் அறியாதவராக இருக்க முடியாது. பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் 2017 ஜூலை ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் GST சரக்கு மற்றும் சேவை வரியானது தொடங்கப்படுகிறது. GST ஒரு நுகர்வு அடிப்படையிலான வரியாகும், இதனால் சரக்கு மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படாது மாறாக நுகரப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படும்.


இந்தியாவில் "மறைமுகவரி ஆட்சி சீர்திருத்த செயல்முறை, கடந்த 1985ல் திரு.விஸ்வநாத் பிரதாப் சிங் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றப்பட்ட மதிப்பு கூட்டு வரி (MODVAT) மூலம் தொடங்கியது. பின்னர் திரு.வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலத்தில் மாநில அளவிலும் இதனை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது, பின்பு திரு.மன்மோகன்சிங் ஆட்சிகாலத்தில் 2005ல் மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரி அமலுக்கு வந்தது.





இப்படி உதிரியாக அமல்படுத்தப்பட்ட வரிகள் வணிகர்களுக்கு அதிக குழப்பத்தையும், சிரமத்தையும் தந்தது ஆகவே மேற்கண்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி GST உருவாக்கப்பட்டது.


சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பிணையம்" (GSTN), என்ற இந்த அமைப்பு மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கீட்டில் 10 கோடி முதலீட்டில், ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக(NPO)" அனைவரும் பங்குபெறும் வகையில் அதாவது அதன் பங்குதாரர்களாக அரசு, வங்கிகள் மற்றும் வரி செலுத்துவோர். என அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது. இதில் மத்திய அரசு 24.5 சதவீத பங்குகளிலும், மாநில அரசுகள் 24.5 சதவீத பங்குகளிலும் மேலும் மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் தனியார் வங்கி நிறுவனங்களாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


தற்போது நடைற்ற 45ஆவது கூட்டத்திற்கு முந்தைய ஐந்து கூட்டங்கள் கொரோனா பேரிடர் காரணமாக இணைய வழியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.


40 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 12 ஜூன் 2020
41 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 27 ஆகஸ்ட் 2020
42 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 12 அக்டோபர் 2020 
43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 28 மே 2021 
44 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 12 ஜூன் 2021


45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி இணையவழியில் நடைபெறாமல், நேரடிப் பங்களிப்பில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.


ஆகவே, இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த நிதித் துறையில் அமைச்சராக இருந்தும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தமிழக நலனுக்காக பங்கு பெறாமல், அதன் மதிப்பைப் பழித்தும் பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை அரசியல் சாசன எதிர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும்.


மேலும் மே 07,2021, ல் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்ற 43 மற்றும் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழக நிதி அமைச்சர் அப்போதும் கோவா அமைச்சருடன் சர்ச்சையில் ஈடுபட்டது பேசு பொருளானது,


இப்படி ஒரு அமைச்சரை தங்கள் அமைச்சரவையில் வைத்திருக்கும் உங்களுக்காகவே அடுத்த குறளும் அமைந்தது போலும் 


பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.


தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல்தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்,என்கிறார் வள்ளுவர்.




பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி GST பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிக்கட்சித் தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது, ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக் காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என்பதை தங்களுக்கு அறிவுறுத்தவே தமிழக மக்கள் சார்பாக இக்கடிதம்..


ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையின் காரணமாக, ஒரு எதிக்கட்சியின் கடப்பாடாக கருதி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற குறளை வழியில் தமிழக மக்கள் நலம் காக்க இக்கடிதம் எழுதியுள்ளேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்


கொழுந்தியாள் கல்யாணம், வளைகாப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு தன்னை விமர்சித்து வருபவர்களை மனச்சிதைவு கொண்டவர்கள் என ட்விட்டரில் டீவிட் செய்து வருகிறார் அமைச்சர் பி.டி.ஆர்.