தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரை மற்றும் அதன் மீதான விவாதம் ஆகியவை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.1.2022 அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார்கள்.  இதுகுறித்து, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை (8.1.2022) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






முன்னதாக கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எல்லாருக்கும் எல்லாருக்கும் எல்லாம் என்ற திசையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கல்வி என்பதை அடிப்படை உரிமையாகவும் செயல்படுத்திக் காட்ட நினைக்கக்கூடிய அரசாகவும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு கல்லூரிச் சேர்க்கையாக இருந்தாலும் அதற்கு வைக்கப்படும் நுழைவு தேர்வானது ஏழை, எளிய,கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்களை பாதிக்கும். அதனால் 12 வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது ” எனக் கூறியிருந்தார். 


 






கடந்த 5ஆம் தேதி இடம்பெற்ற ஆளுநர் உறையில், “'நீட் தேர்வு தேவையில்லை  என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது'' எனக் கூறியிருந்தார்.


மேலும் படிக்க: 'வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்; அந்த பயம் இருக்கட்டும்'- கரூர் எம்பி ஜோதிமணியின் ட்விட்