அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று (டிசம்பர் 15ஆம் தேதி) முதல் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. 


2022- 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. 


அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


முன்னதாக தேர்வு நாட்களுக்குரிய வினாத் தாள்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தல் வேண்டும் என்று கூறப்பட்டது. 




வினாத் தாள் விநியோகம்


அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மணியிலிருந்தும், பிற்பகல் தேர்விற்குரிய வினாத்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) வினாத்தாட்களை சரியான முறையில் பெற வேண்டும் எனவும் உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்தத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத் தாள்களைத் தயாரித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படை பின்பற்றப்பட்டு வருகிறது. 


அரையாண்டு  விடுமுறை


இன்று தொடங்கும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. 


அதேபோல சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.