திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், அச்சமங்கலம், கீழ்நமண்டி ஆகிய கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாட்டுப் பாதை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை, இதுகுறித்தும் பல முறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தெரிவித்துள்ளனர். ஆனால் இது வரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மிகவும் வேதனையுடன் இருந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், அச்சமங்கலம், கீழ்நமண்டி நான்கு கிராமங்களைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூதன முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆலோசித்து வந்தனர்.


 




 


பாடை கட்டி நூதன போராட்டம் 


அதன்படி விவசாயிகள் பாடை ஒன்றை கட்டி தயார் செய்தனர். பாடைக்கு மாலை அணிவித்த அவர்கள் சென்னாவரம் கூட்டுச் சாலையிலிருந்து பாடையை தூக்கிக் கொண்டு வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர். அப்போது அவர்களை குறைதீர் கூட்டத்துக்கு செல்ல விடாமல் வந்தவாசி தெற்கு காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி கோச முழுக்கங்கள் எழுப்பினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




சுடுகாட்டு பாதை அமைப்பதாக அதிகாரி உறுதி 


இதையடுத்து தகவல் அறிந்த செய்யாறு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனரும், குறைதீர் கூட்ட அலுவலருமான கே.எஸ்.யுவராஜ், வந்தவாசி தாசில்தார் ஆர்.பொன்னுசாமி, வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாடையை கீழே இறக்கி வைத்த விவசாயிகள் மயானங்களுக்கு பாதை வசதி செய்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் சுடுகாட்டு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு வாரத்தில் சுடுகாட்டுப் பாதை அமைத்து தர விட்டால் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அம்மக்கள் தெரிவித்தனர்.