திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த  மேல் கருமாங்குளம் பகுதியில், நேற்று இரவு காரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 11 இளைஞசர்கள் பெங்களூரை நோக்கி பயணம் மேற்கொண்ட போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து கருமாங்குளம் அருகே வந்து கொண்டு இருந்த போது டாடா சுமோ காரும் அரசு பேருந்தும்  நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் பரிதாபமாக சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்லான்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2  இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும்  கவலைக்கிடமான நிலையில் இருந்த 4 இளைஞர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். 


 




 


மேலும் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு  வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில்  பலியான இளைஞர்களின் உடல்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விபத்தில் பலியானவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கெலமங்கலம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.  தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெலமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார்  நிறுவனத்தில் , இவர்கள் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, காரில் புதுச்சேரிக்கு இன்ப சுற்றுலா சென்றுவிட்டு, மீண்டும் கெலமங்கலம் நோக்கி திரும்பியபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 1.சுவான், 2.கிஸ்தபா, 3.விஷாஸ், 4.சிப்பான், 5.டோலா, 6.கிஸ்மத், என்பது தெரிய வந்துள்ளது. 


 




இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட  ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பே. கிரி விபத்து குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த 15-ம் தேதி செங்கம் பக்கிரிபாளையம் பகுதி நெடுஞ்சாலையில், சொகுசு  காரும் லாரியும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. அந்த கோர விபத்திலும், காருக்குள் பயணித்த குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த 2 விபத்துகளுமே ஒரே பகுதியில் தொடர்ச்சியாக நடந்தவை. மொத்தமாக 14 உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கிறது. செங்கம் பகுதியிலேயே இடையிடையே, ஏற்பட்ட சின்னச்சின்ன விபத்துகளிலும் ஒன்றிரண்டு உயிர்கள் பலியாகின. இதனால், செங்கம் வழியாக பெங்களூரு - திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் பயணம் செய்யவே வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விபத்து அதிகம் நேர்வதால், செங்கம் பகுதி பைபாஸ் சாலையில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள், சாலையின் நடுவே தடுப்புச் சுவர்களை எழுப்பி, விபத்துகளை குறைப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.