திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்படுகிறது. 


கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் கடைவீதிகளில் அகல் விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை  திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்றது. 


 பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. நேற்று (நவம்பர் 23)  தேரோட்டம் நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக  நாளை மறுநாள் (நவம்பர் 26) அதிகாலை அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வில்  ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த 2 நிகழ்ச்சிகளுக்குமான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இன்று காலை 10 மணி முதல்  பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மகா தீபம் காண மலையேறும் பக்தர்களுக்கு  பல நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, “நவம்பர் 26 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும். அங்கு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும், தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதியளிக்கப்படும் பட்சத்தில் அதனை திரும்ப கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: Thiruvannamalai Deepam: கார்த்திகை தீபம் 2023! மலையேறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள் - முழு விவரம் இதோ!