திருவண்ணாமலை : உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

Continues below advertisement

திருக்கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் மாதம் 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் செய்ய தமிழகத்திலேயே 2 வது மிக உயரமான ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் அருகில் திருக்கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் ஏராளமான விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு திருவிழாவாகும். 

Continues below advertisement

இந்த திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஸ்ரீ விசுவாவசு ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்று விழா வருகிற நவம்பர் மாதம் 24- ஆம் தேதி காலை திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்புறம் உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய விழாக்கள் ஆன 6 ஆம் நாள் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி இரவு வெள்ளித் தேரும், 

நவம்பர் 30- ஆம் தேதி மாடவீதிகளில் தேர்த் திருவிழாவும், அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 3- ஆம் தேதி அதிகாலை திருக்கோவிலின் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 தினங்களும் காலை, இரவு என இரு வேளைகளிலும் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

 

இந்தத் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் தீட்டுதல், மாடவீதியில் உலா வரும் தேர்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்காக இன்று காலை சம்பந்த கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்காலுக்கு திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆசியாவிலேயே 2 வது உயரமான ராஜகோபுரம் முன்புறம் உள்ள 16 கால் மண்டபம் அருகே காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கன்யா லக்னத்தில் 06:57 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  இந்த விழாவில் திருவண்ணாமலை ஆட்சியர் க.தர்ப்பகராஜ், திருக்கோவில் இணை ஆணையர் பரணிதரன், தக்கார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.