எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசாக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். 


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் இறுதி நாளான கடந்த  ஆகஸ்ட் 11 ஆம்  தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருநாள் கூட முழுவதுமாக நடைபெறவில்லை. காரணம் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இரு அவைகளிலும் முதலில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 


அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி கடைசி நாளில் விளக்கம் அளித்திருந்தார்.அவரது விளக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


இதனிடையே சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  “நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும்,  பல குற்றங்களுக்கு தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய பாஜக அரசு 42 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசாக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.  நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், பிரதமர் மோடி அலட்சியமாக செயல்பட்டு வருகிறார். 


மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,  பலர் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார். மாநில கட்சியான திமுக மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் இங்குதான் உள்ளது. 


தமிழ்நாட்டில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதை கடந்த காலத்தில் நிரூபித்துள்ளோம். அதனால்வரும் தேர்தலிலும் நிரூபிப்போம். இந்தியா கூட்டணி பெயரை கேட்டாலே பாஜக அரசுக்கு கோபம் வருகிறது எனவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.