வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தேவரிஷி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சௌந்தரராஜன். ராஜகிரி  தம்பதிகளின் ஒரே மகன் சபரி. பெற்றோர் இருவரும் இறந்து விட்ட நிலையில் தற்போது குடியாத்தம் அடுத்த ர. ராமாபுரம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி ஆனந்தி அம்மாளிடம் தங்கி, குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . தற்போது கொரோனா விடுமுறை காரணமாக பள்ளிகளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வருகிறார் சிறுவன் சபரி.   


  


இந்நிலையில் ர ராமாபுரம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலை சீரமைக்கும் பணிக்காக , திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தில் இருந்து 4  பேர் கொண்ட குழு கடந்த ஒரு வரமாக கோயிலில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் கோயில் வேலைக்கு வந்த ஒருவரது சுமார் 10,௦௦௦ ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் காணாமல் போய்விட்டது . மொபைல் போனை பறிகொடுத்த நபர் தமக்கு சபரி மேல் சந்தேகம் இருப்பதாக  தெரிவித்துள்ளார் .  


இதை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த கோபிநாத் (34) , குணா (36) மற்றும் உமாநாத் (33) ஆகியோர் நேற்று மாலை  கோவில் அருகில் விளையாடிக் கொண்டு இருந்த சபரியை ஊர் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று  சிறுவன் அணிந்திருக்கும் சட்டை, லுங்கி  அனைத்தையும் கழட்டி விட்டு அங்கு இருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து  சுமார் 2 மணி நேரத்திற்கு ஒயர் மற்றும் புளியமரத்தின் பச்சை குச்சிகளை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதில் வலி தாங்க முடியாத சிறுவன் துடிதுடித்து கத்தி உள்ளான்.  


  
இதை அறிந்த கிராமத்தில் உள்ள ஒருவர் குடியாத்தம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் .  பின்னர் தாசில்தார் சரவணன் உத்தரவின் பெயரில் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு,  மற்றும் பரதராமி,  சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தது. 


 


சிறுவனை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார் சிறுவனை தாக்கிய கோபிநாத் , குணா , உமாநாத் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் தந்தையை இழந்த 15  சிறுவனை , வெறும் சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு கொடூரமாக தாக்கி உள்ள சம்பவம்  கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவன் எவ்வளோ சொல்லியும் அதனை கேட்காமல் தாக்கிய மூவரையும் சிறையில் அடைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.