காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிறைந்தன

 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கான  ஆக்ஸிஜன் படுக்கைகள் முழுவதுமாக  நிரம்பியதால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு போராடியபடி வெளியே காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 



 

 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையில் மொத்தம் 672 படுக்கைகள் உள்ள நிலையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 375 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  இதில் 260 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவையும், 115 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

260 ஆக்சிசன் படுக்கைகளும் முழுமையாக நிரம்பி உள்ளது. நாள் தோறும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக வரும் நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் சிகிச்சை பிரிவிற்கு வெளியே காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காத்திருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஒருபுறம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் மற்றொருபுறம் புதிதாக வரக்கூடிய நோயாளிகளை எதிர்கொள்ள வேண்டிய சிரமம் என பணியாளர்கள் பற்றாக்குறையும் ஒருபுறம் கடும் சவாலாக உள்ளது. 



 

நேற்று வரை 45,718 நபர்கள் தொற்றால் பாதிப்படைந்துள்ளன, 40,369 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், தற்போது 4,696 மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்ட முழுவதும் நேற்று ஒரே நாளில் 9 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது வரை 653 நபர்கள் இறந்துள்ளனர்.

 



 

புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கிய கட்டிடத்தில் 347 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது . இந்த கட்டிடம் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக கட்டி முடித்தவுடன் மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கூறிய நிலையில் தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் தற்பொழுது 6KL திரவ ஆக்சிஜன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் புதியதாக ஆக்சிசன் படுக்கை அதிகரித்தால் கூடுதலாக 10KL திரவ ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால் அதனை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.