கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் தொண்டர்கள் தனக்கு மரண பயத்தை காட்டியதாக அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு
கடந்த 2026 ஆகஸ்ட் 17ம் தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விசிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகமும், விசிகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என அறிவித்தார்.
இந்த மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமாவளவன் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் பிரச்னையை சந்தித்ததும், அடங்க மறுத்த தொண்டர்களுக்கு அடி கொடுத்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த மாநாட்டில் 3 நிமிடங்கள் மட்டுமே திருமாவளவன் பேசியது தொண்டர்களுக்கு ஏமாற்றமளித்தது. இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
கரூரில் நடந்தது போல இங்கு நடந்து விடக்கூடாது. மக்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற பதற்றம் எனக்கு இருந்தது. அதனால் ஓரிரு நிமிடங்களில் நான் எனது உரையை நிறைவு செய்தேன். அனைவரும் பாதுகாப்பாக திரும்பிச் செல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன். இன்னும் சில நிமிடங்கள் நான் பேசிக்கொண்டே இருந்திருந்தால் அந்த நெரிசல் எந்தளவுக்கு போயிருக்கும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை.
அந்த அளவுக்கு கடல் அலை வீசுவது போல விசிக தோழர்கள் ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு தற்காத்துக் கொண்டு தான் போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் உணர முடியும். இதுவரை நாம் நடத்திய எந்த மாநாட்டிலும் இல்லாத அளவிற்கு புதிய இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
ஜென்ஸி என சொல்லப்படும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வழக்கத்திற்கு மாறாக பெருமளவில் திரண்டிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் என்னோடு அந்த நெரிசலிலும் கூட மரண பயணம் மேலோங்கி இருந்த சூழலில் கூட என்னுடன் ஃபோட்டோ எடுக்க காட்டிய ஆர்வம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நான் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக திரும்பிச் செல்லுங்கள் என அந்த நெரிசலிலும் கேட்டுக் கொண்டேன்.
வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள். மாற்றித்தின்றனாளிகள் என அந்த மாநாட்டுக்கு நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற கவலை எனக்கு மேலோங்கியது. அதனால் 3 நிமிடங்களில் எனது பேச்சை நான் முடித்துக் கொண்டேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
