திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட அரசுப்பேருந்துகளில், பயணச்சீட்டுகளுக்காக பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


”2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது”


திருநெல்வேலி போக்குவரத்து மண்டல பொதுமேலாளர், பயணிகளிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துனர்கள் பெற வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,  "இந்திய ரிசர்வ் வங்கி 19.04.2023 தேதிய அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூபாய் 2000 இந்திய நோட்டுகள் சட்டபூர்வமான டெண்டராக இருக்கும், மேலும் 30 செப்டம்பர் 2023 தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000/- வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செலுத்த இயலாத நிலை:


இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், 23.05.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசுல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது.


”2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது”


நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.  


பணத்தை எப்படி மாற்றுவது?


2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், திருநெல்வேலி போக்குவரத்து கழகம் சார்பில், 2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.