Independence Day 2022: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு

இந்திய சுதந்திரத்தை அடையாளப்படுத்தியது திருவாவடுதுறை ஆதீனம் அனுப்பிய செங்கோல், இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு குறித்து ஆதீன 24 வது குருமகா சந்நிதானம் தகவல்.

Continues below advertisement

மௌண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம். அதுவும் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது. ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது. எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது! 

Continues below advertisement


சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மௌண்ட்பேட்டன் தெரிவித்தார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, ராஜாஜியிடம் கூறினார். மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார். 


எனவே, ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும், ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி' திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும் டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று. அன்றைக்கு பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார். ஆதீனமும் கோளறு பதிகத்தை பாட சொன்னார்கள்.


ஆகஸ்ட் 15-ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து, ஓதுவாமூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள். அரசுச்சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் தற்போது பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பாரதத்தின் ஆட்சி மாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைப்பிடிக்கப்படவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினர்கள், இந்த வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும்.


கோளறு பதிகம் முதல் மற்றும் நிறைவு பாடல்கள்.

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்

ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

இந்திய சுதந்திர வரலாற்றை அதன் 76-வது ஆண்டில் நினைவு கூறுவதில் நாமும் பெருமிதம் கொள்வோம் என திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.


Continues below advertisement
Sponsored Links by Taboola