தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளில் முக்கியமான கட்சிகளில் ஒன்றாகவும். தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகவும் திகழ்வது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும். காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்று ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.


இன்று மது ஒழிப்பு மாநாடு:


இதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது. இந்த கோரிக்கைகளை மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேற்ற உள்ளனர்.


இந்த மாநாட்டிற்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனைத்திந்திய மாதர் சங்கத் துணைத்தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆனிராஜா. காங்கிரஸ் எம்.பி. சுதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.


பெரும் பரபரப்பு:


சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மிகப்பெரிய மாநாடு இந்த மாநாடு ஆகும். இந்த மாநாடு அறிவிப்பு தொடங்கியது முதலே தி.மு.க.விற்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. மேலும், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்தது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூனா விமர்சித்தது என அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்தது.


இந்த சூழலில், பல்வேறு சர்ச்சைகளை கடந்து இன்று விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நடைபெற இருப்பதால் அது தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் வரை பங்கேற்க இருப்பதாகவும், அதுவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சீருடையில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


என்ன பேசுவார் திருமா?


இந்த மாநாட்டிற்காக உளுந்தூர்பேட்டை முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், ,லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருப்பதால் போலீசார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மாநாடு நடைபெற உள்ள இடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள திருமாவளவன், மது விலக்கு பற்றி இந்த மாநாட்டில் என்ன பேசப்போகிறார்? என்ற கருத்தும் அரசியல் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.