அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக, அண்மையில் நடந்த கட்சி கூட்டத்தில், அதிமுக நான்காக உடைந்து இருப்பதாக  அன்புமணி ராமதாஸ்  விமர்சித்து இருந்த நிலையில் அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர்,


”அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்த பின்னர் தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன்பு பாமகவிற்கு அங்கீகாரமே கிடையாது. 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக  ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாமகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதை அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும்.


1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவிற்கு 5 சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் நான்கு இடத்தில்  அதிமுகவின் தயவால், பாமக வெற்றி பெற்றார்கள். நான்கு இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் பாமகவிற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் மறந்து விட்டு நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல,பாமக தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.


2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவிற்கு 27 இடங்களில்  சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் 20 இடங்களில் பாமக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக தயவால் மட்டுமே பாமகவினர் வெற்றி பெற்றீர்கள். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பாமகவினர் உள்ளே சென்றீர்கள். உங்கள் கட்சி நிகழ்வில் உங்கள் தொண்டர்களை மகிழ்விக்க நீங்கள், “பாமக தான் இனி அடுத்த ஆளும் கட்சி” என்பது போன்று என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதற்காக பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை ஆகி விடுமா?


அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அதனால் தான் அவர் மத்திய அமைச்சர் ஆனார். அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இது போன்ற கருத்துக்களை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் இனி வரும் காலங்களில் செய்ய வேண்டாம். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி எங்கள் தரப்பில் இருந்து நிச்சயம் கொடுக்கப்படும். அவர் ஒன்றை சொன்னால் அதிமுக சார்பில் நூறு சொல்வோம்" என கூறியுள்ளார்.


இந்நிலையில் இன்று பா.ம.க வழக்கறிஞர் பாலு ஜெயகுமார் கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அதில்,” பா.ம.கவால் தான் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். கடந்த அதிமுக ஆட்சி அமைத்தது பா.ம.க வால் தான் என்று ஒரு போதும் நாங்கள் கூறியதில்லை. ஜெயகுமார் விமர்சனம் செய்வதற்கு முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு செய்தி தொடர்பாளர் எதை சொல்ல வேண்டும் என்பதை விட எதை சொல்லக்கூடாது என்பது முக்கியம். ஜெயகுமார் சொன்னது அவரது சொந்த கருத்து, இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்றார். அதிமுக உடனான கூட்டணி குறித்து பேசும் சூழல் தற்போது இல்லை. ஜெயகுமார் கூறும் கருத்தை பெறிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதிமுக பிளந்து கிடக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட தெரியும்” என்றார்.


மேலும் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க வேண்டும் என அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார். 2019ஆம் அண்டு தேர்தலில், பா.ம.க அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்ததன் காரணமாக தான் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது என தெரிவித்தார்.


பா.ம.க வின் பலம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அதிமுக வீழ்ந்து கிடந்த போதெல்லாம் மீண்டும் உயிர்பெறுவதற்கு பா.ம.க உடனிருந்தது அவர்கள் மறக்கக்கூடாது. ஜெயகுமார் இதுபோன்ற கருத்தை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அதிமுக கட்சி விவகாரம் அவர்களுக்குள் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் வரும் 6 மாத காலத்திற்கு முன் பா.ம.க கூட்டணி பற்றி முடிவெடுக்கும் என தெரிவித்தார்.