குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தது.


நெல்லை, தூத்துக்குடியில் பேய்மழை:


பல பகுதிகள் வெள்ளதால் சூழப்பட்டது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக இழந்து தவித்து வருகின்றனர். 4 மாவட்டங்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனிடையே தென் மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்ற விரைவு ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக கோவில்பட்டி ரயில் நிலையத்தை தாண்டி எந்த ரயிலும் செல்ல  முடியவில்லை. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதோடு, மழை வெள்ளத்தால் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


ரயில்கள் ரத்து:


அனைத்து ரயில் நிலையங்களிலும் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை ஓய்ந்து தண்ணீர் வடிய தொடங்கியுள்ளதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இன்று முதல் வழக்கம்போல முக்கியமான ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் தெற்கு ரயில்வே தரப்பில் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நாகர்கோவில் முதல் திருச்செந்தூர் (06641) வரை செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி முதல் புனலூர் (06640) வரை இயங்கும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருச்செந்தூர் முதல் பாலக்காடு (16732) வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்செந்தூரில் இருந்து புறப்படாமல் திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.


மேலும், வெள்ள பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஈரோடு முதல் திருநெல்வேலி (16845) வரை செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி முதல் மைசூரு (16235) செல்லும் ரயில் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். தூத்துக்குடி முதல் சென்னை வரை இயங்கும் (pearl city express) ரயில் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.