பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (ஆக.19) முதல் ஒரு மாதம் நிறுத்தப்பட்டு உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அறுபடை வீடுகளில் ஒரு விடு பழனி முருகன் கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். இங்கு பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, விஞ்ச், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளது.


படிப்பாதை அல்லது யானை பாதை பயன்படுத்த முடியாத பக்தர்கள் விஞ்ச் அல்லது ரோப் கார் மூலம் கோயிலுக்கு செல்வார்கள். விஞ்ச் பயன்படுத்தி சென்றால் 7 நிமிடத்தில் கோயிலுக்கு சென்றடைய முடியும். அதே சமயம் ரோப் கார் மூலம் 3 நிமிடத்தில் கோயிலுக்கு செல்ல முடியும். விஞ்ச் சேவை விட ரோப் கார் சேவை வேகமாக செல்லும் என்ற காரணத்தால் பெரும்பாலான மக்கள் ரோப் காருக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பார்கள்.


பல இடங்களில் ரோப் கார் சேவை இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் ரோப் கார் கேபிள் முறிந்து விழுந்த சம்பவங்கள் நடைபெற்றது உண்டு. அப்படி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாதம் ஒரு முறையும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் வேலையில் இந்த சேவை ரத்து செய்யப்படும். அந்த வகையில் ஆண்டு பராமரிப்பிற்காக ஒரு மாத காலம் அதாவது இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை இந்த சேவை செயல்பாட்டில் இருக்காது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல படிப்பாதை, விஞ்ச் அல்லது யானை பாதை வழியாக செல்ல மக்களுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கம்பிவட உயர்தி சேவை (Rope Car) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 19.08.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில் (Winch), படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.