சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மக்களவை மாநிலங்களவையில் நடைபெறுவது முழுமையாக மக்கள் காணும் வகையில் நேரலை செய்யப்படுகிறது. இதற்காக பிரத்யேக தொலைக்காட்சிகளும் செயல்பட்டு வருகிறது. அதே போல் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளும் நேரலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.


குறிப்பாக 2011ஆம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக 29 எம்.எல்.ஏக்களை பெற்று பிரதான எதிர்கட்சியானது. அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்ற சில காலத்திலே இரு கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது. சட்டமன்றத்திலே ஓப்பனாக சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கையை உயர்த்தி, நாக்கை துறுத்து சண்டைப்போட்ட சம்பவம் வரலாற்றில் மறக்க முடியாது. அப்போது அவரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ” எனக்கு முன் இருந்த கேமிராவில் பதிவானதை மட்டுமே எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அதிமுக தரப்பில் என்ன செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்” என கூறினார்.


அதனை தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் கிடப்பில் இருந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 2015 ல் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, பேரவை செயலாளரின் நிலைப்பாட்டை 2 வாரங்களில் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. 


இந்த வழக்கில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும், அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாகவும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டனர்.