அரிக்கொம்பன் யானையை அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.


இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரிக்கொம்பன் அல்லது அரிசிக் கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு காட்டு யானைகளை கும்கி யானைகளாக மாற்றவே அதிக ஆர்வம் செலுத்திகிறது. அரிசி கொம்பன் விவகாரத்திலும் கேரள அரசு அதே  முடிவெடுத்தது. ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் அரிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. பின்னர் அது வசித்து வந்த சின்னக்கானல் பகுதியில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற அனுமதிக்குமாறு கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிக்கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரியார் புலிகள் சரணாலயம் மேகமலை- ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியின் அருகில் இருந்ததால், யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. அரிக்கொம்பன் யானை தான் நன்கு அறிந்த சின்னகானல் பகுதிக்கு செல்லும் முயற்சியாகவே கம்பப் பகுதிக்குள் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது. அரிசிக்கொம்பன் யானையை பொருத்தவரை சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 1985 ஆண்டு பிறந்தது. அங்கிருக்கும் பழங்குடியின மக்களின் தகவலின் படி தனது 2 வயதில் தாய் யானையை இழந்தது.  குட்டி யானையாய் இருந்த அரிக்கொம்பன் தாயின் சடலத்தை விட்டு விலகாமல், அங்கேயே சுற்றி வந்தது.


அதன் பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தாய் யானை இறந்த அந்தப் பகுதியை பார்த்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்த சூழலில் ஊடகங்கள் யானையை  முரட்டுத்தனமான, இழிவான வார்த்தைகளால் குறிப்பிடுவது ஏற்கும் வகையில் இல்லை.


ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும். அரிக்கொம்பன் யானையை ஊடகங்கள் முரட்டுத்தனமான, இழிவான வார்த்தைகளால் குறிப்பிடுவதை தவிர்க்க உத்தரவிட வேண்டும். அரிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கும், யானை நீர் வறட்சியால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும். மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிக்கொம்பன் யானையை அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் தரப்பில், "அரிக்கொம்பன் யானையை அது நன்கு அறிந்த, வசித்த பகுதிக்கு செல்லும் வகையில் தமிழகத்தில் எல்லைப் பகுதியில் விட உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டது.


அதற்கு நீதிபதிகள், "தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து யானையை பிடித்துள்ளனர். சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் இந்த விஷயத்தில் நிபுணர்கள் இல்லை. ஆகவே இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, அங்கு பட்டியலிட உத்தரவிடுவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது”.