மேட்டூர் அணையின் உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேட்டூர் அணை அதன் 90 ஆண்டுகால வரலாற்றில் 43 வது முறையாக கடந்த 29 ஆம் தேதி மாலை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுமையாக 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.


முதலில் 46 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது மேட்டூர் அணையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரிக் கரையில் உள்ள நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இதனிடையே மேட்டூர் அணையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி அமைந்துள்ள 16 கண் பாலம் பகுதியை பார்வையிட்ட அவர், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மேட்டூர் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


மேலும், வரும் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தீயணைப்புத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டார். நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீரில் இறங்கி குளிக்க, நீச்சல் அடிக்க, மீன்பிடிக்க மற்றும் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 


இதேபோன்று காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.