நாமக்கல் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சேலம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 




சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு திருட்டு வழக்கில் தொடர்புள்ளதாக கூறி, பிரபாகரன் மற்றும் அவரது மனைவி அம்சலா இருவரையும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினர் கடந்த 8 ஆம் தேதி மதியம் கருப்பூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று நாள் போலீஸ் காவலுக்கு பிறகு, 11 ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கைது செய்து பிரபாகரனை நாமக்கல் மாவட்ட கிளை சிறையிலும், அவரது மனைவி அம்சலா சேலம் மகளிர் மத்திய சிறையிலும் அடைத்தனர். 12 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பிரபாகரன் நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அம்சலா 12 ஆம் தேதி காவல் துறையினரால் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அன்றைய தினம் இரவே பிரபாகரன் உயிரிழந்தார்.




பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 13-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரத் குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், பிரபாகரனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர், கருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடைபெற்று முடிந்தது. 


இந்த நிலையில் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரபாகரனின் குடும்பத்தினரிடம் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று வழங்கினார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் ​நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் வழக்குசிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளதாகவும்,  குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என மாற்றுத்திறனாளி பிரபாகரன் மனைவியரிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.