தமிழ்நாட்டில் புதிதாக 386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு  மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, எண்ணிக்கை 38,051 ஆக உயர்ந்துள்ளது. 


கொரோனா தொற்று நிலவரம்:


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 35,99,404 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,686 சாம்பிள்ஸ் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7,05,50,222 பேருக்கு RT- PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்று சிகிச்சை:


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 2,099 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குணமடைந்தோர் எண்ணிக்கை:


கொரோனா தொற்றிலிருந்து மீண்டு 186 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், இதுவரை 35,59,254 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இப்போது, கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டுமின்றி,  பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் க்ளஸ்டர் பாதிப்புகள் இல்லை:


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டுகளை பார்வையிட்டு மருத்துவர்களிடம் தயார் நிலையில் உள்ள படுக்கைகள் மற்றும் மாதிரி பயிற்சிகளை ஆய்வு செய்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு அரசு மருத்துவமனைகளில் இன்றும் நாளையும் கொரோனா ஒத்திகையை செய்திட அறிவுறுத்தியது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் நாளையும் கொரோனாவிற்கான ஒத்திகை பயிற்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் cluster பாதிப்புகள் இல்லை”  என்று அவர் தெரிவித்திருந்தார். 


உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டியது அவசியம்


நுரையீரல் ஆரோக்கியம்


நுரையீரல் அல்வியோலி எனப்படும் மில்லியன் கணக்கான சிறிய காற்றுப் பைகளால் ஆனது, அவை இரத்த ஓட்டத்திற்கும் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இடையில் வாயுக்களை பரிமாறிக் கொள்கின்றன. சளியை உற்பத்தி செய்வதன் மூலமும், சுவாசக் குழாயில் இருந்து நச்சுகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை அகற்றுவதன் மூலம் உடலின் pH சமநிலை மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை பராமரிக்கின்றன. கொரோனா முதலில் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால், நுரையீரல் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகிறது. நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால், கடுமையான நோய் அல்லது வைரசால் ஏற்படும் சிக்கல்களின் அபாயம் குறைகிறது.


நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்:


புகைபிடிக்க வேண்டாமே!


புகைபிடித்தல் சுவாச மண்டலத்தை சேதப்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இது கொரோனா உட்பட பல தொற்றுநோய்கள் மிகவும் எளிதில் பாதிக்க வழி வகுக்கிறது. ஆரோக்கியமான நுரையீரலை பேன நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் புகைபிடிப்பதை கைவிடுவதாகும்.


ஆழ்ந்த சுவாசப் பயிற்சி


ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் திறனை மேம்படுத்தும். சுவாச தசை வலிமையை மேம்படுத்தவும் உதவும். உதரவிதான சுவாசம் (diaphragmatic breathing) அல்லது பர்ஸ்டு-லிப் சுவாசம் போன்ற நுட்பங்களை தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.


இதோடு ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவற்றையும் பின்பற்ற வேண்டும்.