சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும் மணி மற்றும் ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உண்டு. இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். மேலும் திமுக ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். 



இந்நிலையில், தமிழகத்தில் இந்தி திணிப்பால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர் திமுக கட்சி அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி காலை 11 மணி அளவில் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டு அதே இடத்தில் உயிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் மோடி அரசே மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு , இந்தி எழுத்து மாணவ, மாணவிகள் வாழ்க்கை பாதிக்கும் இந்தி ஒழிக இந்தி ஒழிக என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். அவரது இறப்பு செய்தி கேட்டவுடன் அமைச்சர் சி.வி.கணேசன், தங்கவேல் உடலுக்கு நேரில் சென்று திமுக சார்பில் அஞ்சலி செலுத்தினார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் வருகை தந்த சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, இந்தி திணிப்பால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட தங்கவேல் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து உயிரிழந்த தங்கவேலுவின் மனைவி ஜானகி இடம் ஆறுதல் கூறினார். அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர ஆணையாளர் கிறிஸ்தவராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வது கணபதி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.