ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது முழு அறிக்கையை அரசிடம் இன்று தாக்கல் செய்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழ்நாடு முதல்வர் அவர்களும், தமிழ்நாடு அரசும் இந்த ஆணையத்தை தொடரலாம் என்று சொன்னதுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். முதலில் ஆறுமுகசாமி ஆணையம் நீதிமன்றம் போல் செயல்பட்டதாக உச்சநீதிமன்றம் கூறியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் தாமதம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆறுமுகசாமி, மொத்த விசாரணையுமே அது தொடர்பானதுதான். அந்த அறிக்கையைத்தான் தற்போது அரசிடம் அளித்துள்ளோம். அறிக்கையை வெளியிடலாமா என்பதை அரசுதான்முடிவு செய்யும். ஆங்கிலத்தில் 500 பக்கமும், தமிழில் 608 பக்கமும் தாக்கல் செய்யப்பட்டது. 






தொடர்ந்து, ”ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவந்த விதத்தில் சந்தேகதன்மையான எதுவும் இல்லை. அதனால் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்யவில்லை. அதேபோல், சசிகலா நேரில் வர தயாராகயில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை “ என்றார். 


எய்ம்ஸ் அறிக்கை : 


ஜெயலலிதா சிகிச்சையை நேரில் பார்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு இதுவரை 6 அறிக்கைகளை அளித்துள்ளது. அதனையும் ஜெயலலிதா இறந்து 3 மாதங்களுக்கு பிறகே முதல் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை அளித்தது. 






அறிக்கை தாக்கல் : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (27.08.2022) தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.ஆறுமுகசாமி அவர்கள் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.


இவ்விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலையில், இன்று (27.08.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார். இந்த அறிக்கையை 29.08.2022 அன்று நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்


இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் முனைவர் திரு. எஸ்.இரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, ஆகியோர் உடனிருந்தனர்.