அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 


கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சியில் இருந்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தனி நீதிபதி தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் வந்தது.


இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாததால் அதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.


இதனை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என்றும், முடிவை அறிவிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கடந்த மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியானதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். 


தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு 3வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி  பொதுச்செயலாளராக செயல்பட தடைவிதிக்கக்கோரி இடைக்கால  உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அப்படி உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்தி விடும் என தெரிவித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு,  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.