தென்காசியில் உள்ள ஆலங்குளம் பகுதியில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்து  மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  


தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் விவசாய பணிகளுக்காக கிணறு தோண்டும் பணி கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்துள்ளது. இதில் இன்று காலை கிணறு வெட்டும் போது பூமியில் இருக்கக் கூடிய பாறைகளை அகற்ற நாட்டு வெடிகளை பயன்படுத்தி உள்ளனர். அதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனைபுரத்தினைச் சேர்ந்த அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அதில் ஆலங்குளத்தினைச் சேர்ந்த அசீர் சாம்சன் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். 


இவர்களை மீட்டு தென்காசியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. காலையில் வேலைக்குச் சென்று வருகிறேன் எனச் சொல்லிவிட்டு வந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களது குடுமபத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அப்பகுதியினர் இடையே சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.