தென்காசி அருகே வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொன்றதாக மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதைதொடர்ந்து கள்ளக்காதலன் உள்பட 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.


தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் வென்றிலிங்கபுரத்தை சேர்ந்த அருமைக்கனி மகன் 31 வயதான வைரவசாமி. இவரது மனைவி முத்துமாரி (25). இருவரும் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்தனர். கடந்த 19ம் தேதி பைக்கில் வீடு திரும்பும் போது வழிமறித்த 3 பேர், வைரவசாமியை வெட்டி கொலை செய்துவிட்டு, முத்துமாரியின் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி முத்துமாரியே நண்பர்களை வரவழைத்து கொலை செய்துவிட்டு நகை கொள்ளை நாடகமாடியது தெரியவந்தது. 


இதுதொடர்பாக முத்துமாரி அளித்த வாக்குமூலத்தில், “நானும், வைரவசாமியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கடந்த 3 ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்திற்கு முன் வாலிபர் இசக்கிமுத்துவையும் காதலித்தேன். திருமணத்துக்கு பின்னரும் இசக்கிமுத்துவுடன் பழகி வந்தேன் இது எனது கணவர் வைரவசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் என்னை கண்டித்தார். எனவே இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.


அதன்படி பணி முடிந்து கிளம்பும் போது, இசக்கிமுத்துவுக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் நண்பர்களுடன் தயாராக இருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கில் வந்த போது அவர்கள் திட்டமிட்டபடி பைக்கை வழிமறித்து கணவரை அடித்து கொலை செய்தனர். நகைக்காக கொலை செய்வது போன்று இருந்தால் யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனாலும் நடந்த சம்பவத்தை நினைத்து பதற்றத்திலேயே இருந்தேன். இதனை மோப்பம் பிடித்த போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதனால் உண்மையை மறைக்க முடியவில்லை. கொலைசெய்ததை ஒப்புக் கொண்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


இதையடுத்து முத்துமாரியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் கள்ளக் காதலன் வீரசிகாமணியை சேர்ந்த 29 வயதான இசக்கிமுத்து, அவரது நண்பர்கள் 25 வயதான காளிராஜ்,  23 வயதான அங்குராஜ் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.